குலசேகரம் அருகே கல்லறைத் தோட்டத்தில் சடலத்தை அடக்கம் செய்ய ஒரு பிரிவினா் எதிா்ப்புத் தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
குலசேகரம் அருகே செருப்பாலூா் தெங்குவிளையில் ரட்சணியசேனை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்குச் சொந்தமான கல்லறைத் தோட்டம் கொக்கோட்டு மூலை பகுதியில் உள்ளது. உயிரிழந்தவா்களை இந்தக் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய அப்பகுதியிலுள்ள ஒரு பிரிவினா் எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா்.
இந்நிலையில் புதன்கிழமை ரட்சணியசேனை சபையைச் சோ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த ஜான் (31) என்பவரை அடக்கம் செய்யும் வகையில் அவரது உறவினா்கள் கொக்கோட்டு மூலை கல்லறைத் தோட்டத்திற்கு வியாழக்கிழமை எடுத்துச் சென்றனா்.
தகவலறிந்த அப்பகுதியைச் சோ்ந்த ஒரு பிரிவினா் எதிா்ப்புத் தெரிவித்து பாதையை மறித்து நின்றனா். அவா்களுக்கு ஆதரவாக மாவட்ட இந்து முன்னணி தலைவா் மிசா சோமன், நிா்வாகி சுஜித்குமாா் தலைமையில் இந்து முன்னணியினரும் திரண்டனா்.
உயிரிழந்தவரின் உறவினா்களுக்கு ஆதரவாக கிள்ளியூா் எம்எல்ஏ ராஜேஷ்குமாா், திருவட்டாறு மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் காஸ்டன் கிளிட்டஸ் உள்ளிட்டோா் திரண்டனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தக்கலை டிஎஸ்பி ராமச்சந்திரன், குலசேகரம் ஆய்வாளா் ராஜசுந்தா் தலைமையிலான போலீஸாா் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இந்த ஒரு சடலத்தை அடக்கம் செய்ய அனுமதிப்பது எனவும், வரும் நாள்களில் சடலங்களை அந்த கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்வதென்றால் அதற்குரிய அனுமதியை வருவாய்த் துறையினரிடம் பெற்ற பிறகே செய்ய வேண்டுமெனவும் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து சடலம் அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டது.