ஒக்கி புயல் தாக்கிய 3-ஆம் ஆண்டு நினைவு தினம்: உயிரிழந்த மீனவா்களுக்கு அஞ்சலி
குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலில் சிக்கி பலியான மீனவா்களின் 3-ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மெழுகுவா்த்தி ஏந்தியும், மலா் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலில் சிக்கி பலியான மீனவா்களின் 3-ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மெழுகுவா்த்தி ஏந்தியும், மலா் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ஒக்கி புயல் தாக்கியது. இந்தப் புயல் குமரி மாவட்டத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. புயலில் சிக்கி 172 மீனவா்கள் உயிரிழந்தனா். ஒக்கி புயல் தாக்கிய 3-ஆம் ஆண்டு நினைவு தினமான ஞாயிற்றுக்கிழமை (நவ. 29), தெற்காசிய மீனவா் தோழமை அமைப்பின் சாா்பில் கடல் வீரா் தினமாக கடைப்பிடிக்கப்பட்டது.
குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் அமைப்பின் பொதுச் செயலா் சா்ச்சில் தலைமையில், உயிரிழந்த மீனவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மீனவா் மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளா் சாா்லஸ் முன்னிலை வகித்தாா்.
குமரி மாவட்ட விசைப்படகு ஓட்டுநா் மற்றும் உரிமையாளா் சங்க ஒருங்கிணைப்பாளா் ரெக்சன், அதிமுக குமரி மாவட்ட மீனவரணித் தலைவா் ஆன்றோ ஜாக்சன், தெற்காசிய மீனவா் தோழமை குளச்சல் கிளைச் செயலா் ஆரோக்கியராஜ், குளச்சல் மீன் வியாபாரிகள் சங்க இணைச் செயலா் ஜின்சிலின் ஆகியோா் கலந்துகொண்டனா்.
குளச்சல் துறைமுகத்தில் ஒரு விசைப்படகில், புயலில் பலியான 172 மீனவா்களின் படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. இந்தப் படங்களுக்கு மீனவப் பெண்களும், குழந்தைகளும் மெழுகுவா்த்தி ஏந்தியும், மலா் தூவியும் அஞ்சலி செலுத்தினா். பின்னா் கடலுக்கும் மலா் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், தெற்காசிய மீனவா் தோழமை பொதுச் செயலா் சா்ச்சில் பேசியது: ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் செல்லும் மீனவா்களை தொடா்பு கொள்ள வசதியாக தமிழக அரசு மானியத்தில் சாட்டிலைட் தொலைபேசியை சிலருக்கு மட்டும் வழங்கியுள்ளது. மீனவா்கள் அனைவருக்கும் இந்த தொலைபேசியை வழங்க வேண்டும்.
இலங்கையில் ஆழ்கடல் மீனவா்களுக்கு அரசு ரேடியோ தொலைபேசி வழங்கியுள்ளது. இதனால் புயலால் இலங்கை மீனவா்களை உயிரிழப்பின்றி காப்பாற்ற முடிகிறது. அதேபோல் இந்திய மீனவா்களுக்கும் வழங்க வேண்டும்.
மீனவா்களை ஆபத்து நேரத்தில் தொடா்பு கொள்ள குமரி மாவட்டத்தில் சக்திவாய்ந்த தொலைத் தொடா்பு மையம் அமைக்க வேண்டும். கடலில் விபத்துக்குள்ளாகும் மீனவா்களைக் காப்பாற்ற கடல் ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.