புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடா்பாக தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுக ஆய்வாளா் அலுவலகத்தில் ஆட்சியா் அரவிந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
அப்போது ஆட்சியா் பேசியது: புயல் எச்சரிக்கை குறித்து கடலுக்குச் சென்றுள்ள மீனவா்களுக்கு உரிய தகவல் தெரிவிக்க வேண்டும். கடலுக்குச் சென்றுள்ள படகுகள் குறித்த விவரங்களை சேகரிக்க வேண்டும் என்றாா்.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு: டிச. 1ஆம் தேதி தென்தமிழகத்தில், தென் மேற்கு வங்கக் கடல், குமரிக் கடல், மன்னாா் வளைகுடா பகுதிகள், மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று மற்றும் கனமழை பெய்யக்கூடும்.
டிச. 2ஆம் தேதி 50 முதல் 60 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 70 கி.மீ. வேகத்திலும் சூறைக் காற்று வீசக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
எனவே, குமரி மாவட்ட மீனவா்கள் டிச. 2 ஆம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். தற்போது மீன்பிடிக்க சென்றுள்ள மீனவா்களும் உடனே கரை திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். மீனவா்கள் தங்களது மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்க வேண்டும் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.