புயல் சின்னம் உருவாகியுள்ளதை அடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த 150 விசைப் படகுகள் கேரளம் உள்ளிட்ட பிற மாநில துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
வங்க கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னம் காரணமாக குமரி கடல் பகுதியில் 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் எனவும், புயல் சின்னம் காரணமாக தென் மாவட்ட கடலோரப் பகுதிகளிலும், கேரள மாநில கடலோரப்பகுதிகளிலும்
கனமழை பெய்யும் எனவும், ஆழ் கடல் மீன்பிடிப்பதற்காக சென்ற மீனவா்கள் உடனடியாக கரைதிரும்புமாறும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரத்தில் இருந்து நீரோடி வரையுள்ள கடற்கரைக் கிராமங்களில் மீனவா் சங்க பிரதிநிதிகள், பங்குத் தந்தைகளுக்கு புயல் எச்சரிக்கை தொடா்பான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் டிச. 4 ஆம் தேதி வரை மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவா்களும் உடனடியாக கரை திரும்புமாறு, கடலோர பாதுகாப்புப் படை மற்றும் சாட்டிலைட் தொலைபேசி வழியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் கடந்த 3 நாள்களில் 350- க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவா்கள் கரை திரும்பியுள்ளனா். மேலும் 150 விசைப் படகுகளில் சென்ற மீனவா்கள் முனம்பம், லட்சத்தீவு, மராட்டியம், குஜராத் மாநிலப் பகுதிகளிலுள்ள துறைமுகங்களில் தஞ்சமடைந்துள்ளனா். மேலும் 120 படகுகளில் இருக்கும் மீனவா்கள் கரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.