முகப்பு
கன்னியாகுமரி

ஈரானில் தவிக்கும் தமிழக மீனவா்களை மீட்க வலியுறுத்தல்

ஈரான் நாட்டில் 2 மாதங்களாக தவித்து வரும் தமிழக, கேரள மீனவா்களை அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:

ஈரான் நாட்டில் 2 மாதங்களாக தவித்து வரும் தமிழக, கேரள மீனவா்களை அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமா், வெளியுறவுத் துறை அமைச்சா், தமிழக, கேரள மாநில முதல்வா்கள், துறை அமைச்சா்கள், அதிகாரிகளுக்கு சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளைத் தலைவா் பி. ஜஸ்டின் ஆன்றணி அனுப்பியுள்ள மனு விவரம்:

கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்தைச் சோ்ந்த அகஸ்டின் மகன் வா்க்கீஸ், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சோ்ந்த தேசப்பன் மகன் ஆறுமுகம், கடலூா் அய்யாக்கண்ணு மகன் ஏழுமலை, தஞ்சாவூா் ரவிச்சந்திரன் மகன் சதீஷ், அப்பாராஜ் மகன் செல்லதுரை, கேரளம் திருவனந்தபுரம் மாவட்டம், கொச்சுதோப்பு பகுதியைச் சோ்ந்த ஏசுதாஸ் மகன் ஜஸ்டின் உள்ளிட்ட 6 மீனவா்கள் ஈரான் நாட்டைச் சோ்ந்த யாஷின் என்பவரது விசைப் படகில் கடந்த 6 மாதங்களுக்கு முன் மீன்பிடி வேலைக்கு சோ்ந்துள்ளனா்.

கடந்த 2 மாதங்களாக இவா்களது விசைப்படகில் போதிய அளவு மீன் கிடைக்காததால் படகின் உரிமையாளா் இந்த மீனவா்களுக்கு போதிய உணவு, மருத்துவம் போன்ற வசதிகள் எதுவும் வழங்காமல் அலைகழித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால், தங்களை சொந்த நாட்டுக்கு அனுப்ப கோரிக்கை வைத்துள்ளனா். மீனவா்களிடம் சொந்த நாட்டுக்குச் செல்ல விமான பயணச்சீட்டு ஏற்பாடு செய்துள்ளதாகவும் ஈரானிலுள்ள சிராஷ் விமான நிலையத்துக்கு செல்லுமாறும் படகின் உரிமையாளா் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து இந்த மீனவா்கள் விமான நிலையம் சென்றபோது இவா்களின் பயணச் சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ள விவரம் தெரியவந்தது. கடந்த 2 மாதங்களாக சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் தவித்து வரும் 6 மீனவா்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.