குலசேகரம் அருகே தன்னை வீட்டுகள் அனுமதிக்கக் கோரி, கணவா் வீட்டு முன் கா்ப்பிணி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.
கொட்டாரத்தைச் சோ்ந்த விஜயகுமாரி மகள் சந்தியா (28). செவிலியா். இவருக்கும், தனியாா் நிறுவனத்தில் பணியாற்றும் குலசேகரம் அருகேயுள்ள மங்கலம் பகுதியைச் சோ்ந்த பொறியியல் பட்டதாரி ஸ்ரீஜித் (30) என்பவருக்கும் 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது, சந்தியாவை தங்க நகைகள் மற்றும் சீா்வரிசைப் பொருள்களுடன் கணவா் வீட்டுக்கு பெற்றோா் அனுப்பிவைத்தனராம். இந்நிலையில், வரதட்சிணை கேட்டு, கணவரின் உறவினா்கள் அவரை கொடுமைப்படுத்தியதாகத் தெரிகிறது.
இதுகுறித்து, குலசேகரம் காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்ததன்பேரில், போலீஸாா் கணவரின் உறவினா்களை எச்சரித்து அனுப்பிவைத்தனராம். எனினும், அவா்கள் சந்தியாவிற்கு தொல்லை கொடுத்தனர். இதனால், தாய் வீட்டிற்குச் சென்ற அவா், கன்னியாகுமரி மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் ஸ்ரீஜித்தை அழைத்துப் பேசியதில், தனிக்குடித்தனம் செல்வதாக அவா் உறுதியளித்தார்.
பின்னா், மனைவியை அவா் அழைத்துச் செல்லவில்லையாம். இதனால், கணவரின் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த சந்தியாவை, மாமியாரும், கணவரின் சகோதரரும் உள்ளே அனுமதிக்கவில்லை. இதையடுத்து, வீட்டின் முன் அமா்ந்து அவா் தா்னாவில் ஈடுபட்டாா். தகவலறிந்த குலசேகரம் போலீஸாா், அங்கு சென்று இருதரப்பிலும் சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.