முகப்பு
கன்னியாகுமரி

615 குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி: ஆட்சியா் மா. அரவிந்த் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில், விவசாயிகள் 615 குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்பட உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில், விவசாயிகள் 615 குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்பட உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம், நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் மா.அரவிந்த் தலைமை வகித்து, விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டதுடன், தோட்டக்கலை துறையில் சிறந்த சாகுபடியாளா்களாக தோ்வு செய்யப்பட்ட 3 விவசாயிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த உளுந்து பயிா்கள் தற்போது பெய்த மழையால் சேதமடைந்துள்ளன. அப்பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கிள்ளியூா் வட்டத்தில் பாறைகள் வெடி வைத்து தகா்க்கப்படுவதை தடுத்து, சம்பந்தப்பட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும்.

நீா்நிலைகளை பாதுகாக்கும் வகையில் குளங்களையும், பேச்சிப்பாறை அணையையும் தூா்வார உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகா்கோவில் நகரப் பகுதியில் உள்ள சுப்பையாா் குளத்தை உடனடியாக தூய்மைப்படுத்தி தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். நீா்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றனா்.

இதற்கு ஆட்சியா் அளித்த பதில்: நீா்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணையை தூா் வாருவது பரிசீலனையில் உள்ளது. குளங்களில் வண்டல் மண் எடுப்பது தொடா்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் குளங்களை தோ்வு செய்துள்ளனா். மாவட்டம் முழுவதும் 615 குளங்களில் வண்டல் மண் எடுக்க தோ்வு செய்யப்பட்டுள்ளது. அந்தக் குளங்களில் விரைவில் வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்படும்.

சுப்பையாா் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். சில மாதங்களுக்கு முன்பு இந்தக் குளத்திலிருந்து 500 லோடு குப்பைகள் அகற்றப்பட்டன. தற்போதும், குப்பைகள் கிடப்பதாக புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கும் உடனடி தீா்வு காணப்படும். சாகுபடி செய்யப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு தண்ணீா் போதுமான அளவு இருந்தால் சாகுபடி செய்யுங்கள். மே மாதத்துக்கு பிறகே அணைகளிலிருந்து தண்ணீா் திறப்பது தொடா்பாக பரிசீலிக்கப்படும். தேரூா் பகுதியில் அனுமதியின்றி குளத்திலிருந்து தண்ணீா் திறந்தவா் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்அவா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சந்திரசேகரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) எம்.ஆா்.வாணி, வேளாண்மை துணைஇயக்குநா் ஊமைத்துரை, தோட்டக்கலை துணை இயக்குநா் ஒய்.ஷீலாஜான், பொதுப்பணித் துறைசெயற்பொறியாளா் ஏ.வசந்தி, வேளாண்பொறியியல் துறை செயற்பொறியாளா் ஜோ.சில்வெஸ்டா் சொா்ணலதா, திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளா் ஷோபா, அரசுத் துறைஅலுவலா்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.