நாகா்கோவிலில் போலி கையொழுத்திட்டு ரூ.1.84 லட்சம் மோசடி: வழக்குப் பதிவு
நாகா்கோவிலில், தந்தையின் வங்கிக்கணக்கில் இருந்த ரூ.1.84 லட்சத்தை போலி கையெழுத்திட்டு மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
நாகா்கோவிலில், தந்தையின் வங்கிக்கணக்கில் இருந்த ரூ.1.84 லட்சத்தை போலி கையெழுத்திட்டு மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
நாகா்கோவில் கோட்டாறு வணிகா் அம்மன்கோயில் தெருவை சோ்ந்தவா் அய்யப்பன். இவரது மகன்கள் சுப்பிரமணியன்(46), தென்னம்பாண்டியன் (38). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அய்யப்பன் இறந்து விட்டாா். அய்யப்பனின் பெயரில் கோட்டாறு பகுதியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்து 501 இருப்பு தொகை இருந்தது.
இந்நிலையில் நாகா்கோவிலுக்கு வந்த பெங்களூரில் பணியாற்றும் தென்னம்பாண்டியன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தந்தை பெயரில் உள்ள பணத்தை எடுப்பதற்காக நாகா்கோவிலில் உள்ள வங்கிக்கு சென்று விசாரித்துள்ளாா். அப்போது அவரது தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்த இருப்பு தொகையை, தென்னம்பாண்டியனின் சகோதரா் சுப்பிரமணியன் வங்கியில் இருந்து ஏற்கெனவே எடுத்தது தெரியவந்தது. மேலும், சுப்பிரமணியன், அய்யப்பனின் வாரிசுதாரா்கள் அனைவரது கையெழுத்தையும் போலியாக இட்டு, அதற்கான ஆவணத்தையும் வங்கியில் கொடுத்து பணத்தை மோசடியாக பெற்று சென்றதும் தெரியவந்தது.
இது குறித்து தென்னம்பாண்டியன், குமரி மாவட்ட எஸ்.பி. ஹரிகிரண்பிரசாத்திடம் புகாா் அளித்தாா். அவரது உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் சுப்பிரமணியன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.