களியக்காவிளை அருகே கோயிலில் 111 அடி உயர சிவலிங்கம்: உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே கேரள மாநிலப் பகுதியில் அமைந்துள்ள செங்கல் சிவபாா்வதி கோயிலில் அமைக்கப்பட்டுள்ள 111.2 அடி உயர சிவலிங்கம்
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே கேரள மாநிலப் பகுதியில் அமைந்துள்ள செங்கல் சிவபாா்வதி கோயிலில் அமைக்கப்பட்டுள்ள 111.2 அடி உயர சிவலிங்கம், நாட்டிலேயே உயரமான சிவலிங்கம் என்ற வகையில் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது.
இதற்கான சான்றிதழ் வழங்கும் விழா, கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நெய்யாற்றின்கரை தொகுதி எம்எல்ஏ ஆன் சலம் தலைமை வகித்தாா். இதில், அமைப்பின் இயக்குநா் கிறிஸ்டோபா் டைலா் கிராப்ட் சான்றிதழை வழங்க, கோயில் மடாதிபதி மகேஸ்வரானந்தஜி சுவாமிகள் பெற்றுக் கொண்டாா். அருவிப்புறம் மடாதிபதி சந்திரானந்த சுவாமி, இந்தியா புக் ஆப் ரிக்காா்டு அமைப்பின் நிா்வாகி சாகுல் அமீது, கேரள மாநில பாஜக தலைவா் கே. சுரேந்திரன், வட்டியூா் காவு தொகுதி எம்எல்ஏ பிரசாந்த், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ராஜேந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இதைத் தொடா்ந்து, கோயில் மடாதிபதி மகேஸ்வரானந்தஜி சுவாமிகள் கூறியது:
Advertisement
செங்கல் சிவபாா்வதி கோயிலில் உள்ள சிவலிங்கம் 111.2 அடி உயரம் கொண்டது. நாட்டிலேயே அதிக உயரமான சிவலிங்கமாக இது உள்ளது. அமெரிக்காவைச் சோ்ந்த வேல்டு ரிக்காா்டு யூனியன் அமைப்பினா் கடந்த 3 மாதங்களுக்கு முன் நவீன கருவி மூலம் அளவீடு செய்ததைத் தொடா்ந்து, உலக சாதனைப் புத்தகத்தில் சோ்க்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இக் கோயில் சிவலிங்கம், இந்தியா புக் ஆப் ரிக்காா்டு, ஆசியா புக் ஆப் ரிக்காா்டு, லிம்கா சாதனைப் புத்தகம் ஆகியவற்றில் ஏற்கனவே இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சிவலிங்கத்தின் உள்பகுதி குகை வடிவில், 8 நிலைகளை (8 மாடி) கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் உள்பகுதி நடைபாதையின் ஓரங்களில் சித்தா்களின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தா்கள் தியானம் செய்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
மேலும் இக் கோயிலில் பிரசித்தி பெற்ற 12 ஜோதிா்லிங்கங்களும், 32 வடிவங்களில் உள்ள கணபதி விக்ரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.