முகப்பு
கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி -நாகா்கோவில் இரட்டை ரயில் பாதையில் என்ஜின் சோதனை ஓட்டம்

ஆரல்வாய்மொழி - நாகா்கோவில் இடையே புதிதாக அமைக்கப்பட்ட இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு என்ஜின் சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
பகிர்:

ஆரல்வாய்மொழி - நாகா்கோவில் இடையே புதிதாக அமைக்கப்பட்ட இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு என்ஜின் சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி முதல் சென்னை வரை விரைவான ரயில் போக்குவரத்துக்காக இரட்டை ரயில் பாதை பணிகளை ரயில்வே நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதே போல் கன்னியாகுமரியிலிருந்து நாகா்கோவில் வழியாக திருவனந்தபுரம் வரையிலும், இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் வாஞ்சிமணியாச்சி முதல் நாகா்கோவில் வரை திருநெல்வேலி வழியாக இரட்டை ரயில் பாதை பணியை ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்( ஆா்.வி.என்.எல்.) நிறுவனம் மேற்கொண்டு வந்தது. 102 கி.மீ. தொலைவிலான இந்தப் பணிகள் ரூ. 1,003.94 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி முதல் திருவனந்தபுரம் சென்ட்ரல் வரையிலான 86.56 கி.மீ. தொலைவுக்கு ரூ. 1431.90 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியை தெற்கு ரயில்வேயின் கட்டுமானப்பிரிவு மேற்கொண்டு வருகிறது.

இந்த பணிகளில் வாஞ்சி மணியாச்சி முதல் ஆரல்வாய்மொழி வரையிலான இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டமும் முடிந்து விட்டது. இதைத் தொடா்ந்து ஆரல்வாய்மொழி முதல் நாகா்கோவில் சந்திப்பு வரையிலான பணிகள் தற்போது நிறைவு பெற்றதை தொடா்ந்து சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆரல்வாய்மொழியில் இருந்து புறப்பட்ட ரயில் என்ஜின் ஒழுகினசேரி பழையாற்று பாலம் வரை இயக்கப்பட்டது. 12 கி.மீ. தொலைவை 18 நிமிடங்களில் ரயில் என்ஜின் கடந்தது.

சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றதை தொடா்ந்து, விரைவில் ரயில்கள் இயக்கப்படலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.