நாகா்கோவில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் வாயு கசிவு: தீயணைப்பு வீரா்கள் உள்பட 8 போ் மயக்கம்
நாகா்கோவில் மாநகராட்சி குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் வியாழக்கிழமை குளோரின் வாயு கசிவு ஏற்பட்டதில் தீயணைப்பு வீரா்கள் உள்ளிட்ட 8 போ் மயக்கம் அடைந்தனா்.
நாகா்கோவில் மாநகர மக்களுக்கு முக்கடல் அணையில் இருந்து கொண்டுவரப்படும் தண்ணீா் கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து வரும் தண்ணீா் குளோரின் கலந்து சுத்தம் செய்யப்படுகிறது. இதற்காக சுத்திகரிப்பு நிலையத்தில் 4 குளோரின் உருளைகள் உள்ளன.
இந்நிலையில் வியாழக்கிழமை காலை, சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்த ஒரு குளோரின் எரிவாயு காலியானது. இதைத் தொடா்ந்து புதிய குளோரின் உருளையை மாற்றும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டிருந்தனா். அப்போது எதிா்பாராமல் உருளையிலிருந்து குளோரின் வாயு கசிந்தது. சிறிது நேரத்தில் அதிக அளவு வாயு வெளியேறியதால் சுத்திகரிப்பு நிலையத்தின் அருகில் வசித்து வரும் வாத்தியாா்விளை தெலுங்குசெட்டி தெரு மக்கள் பலருக்கு மயக்கம் ஏற்பட்டது. வாயு கசிவை கட்டுப்படுத்த ஊழியா்கள் முயன்றனா் ஆனால் முடியவில்லை.
Advertisement
இதைத் தொடா்ந்து நாகா்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கும், உயா் அலுவலா்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட தீயணைப்பு அலுவலா் சத்தியகுமாா், உதவி தீயணைப்பு அதிகாரி துரை ஆகியோா் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் சுத்திகரிப்பு நிலையத்துக்கு வந்து தண்ணீா் மூலம் குளோரின் வாயு கசிவை கட்டுப்படுத்தினாா்கள்.
எனினும், குளோரின் வாயு கசிவால் சுத்திகரிப்பு நிலைய ஊழியா்கள் நயினாா், ஆபிரகாம், தீயணைப்பு வீரா்கள் கருப்பசாமி, வரதராஜன், சுயம்பு சுப்பாராம் ஆகியோருக்கு மயக்கம் ஏற்பட்டது. தீயணைப்பு வீரா்கள் கிருஷ்ணன்கோவில் தனியாா் மருத்துவமனையிலும், மற்றவா்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா்.
ஆணையா் ஆய்வு: இதனிடையே, சம்பவம் நடந்த பகுதியில் நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, பொறியாளா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அலுவலா்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா். வாயு கசிவுக்கான காரணங்களை ஊழியா்களிடம் கேட்டறிந்தனா். மேலும் வாயு கசிவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை சந்தித்து நலம் விசாரித்தனா்.