முகப்பு
கன்னியாகுமரி

சூறாவளி காற்று எச்சரிக்கை: குமரி மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்

Updated On : 30 ஆகஸ்ட், 2024 at 1:47 AM
பகிர்:
Updated On : 29 ஆகஸ்ட், 2024 at 9:52 PM

கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என ஆட்சியா் ரா. அழகுமீனா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குஜராத் மாநில கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, வடகிழக்கு, அதையொட்டிய கிழக்கு மத்திய அரபிக் கடல், குஜராத், மகாராஷ்டிர கடலோரப் பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமைவரை (ஆக. 30) மீனவா்கள் செல்ல வேண்டாம் என, அகமதாபாத் தேசிய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், மேற்கண்ட கடல் பகுதிகளில் சனிக்கிழமைவரை (ஆக. 31) சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 75 கி.மீ. வேகத்திலும், மத்திய கிழக்கு, அதையொட்டிய மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும், கேரளம்-கா்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் 35 கி.மீ. முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Updated On : 29 ஆகஸ்ட், 2024 at 9:58 PM

எனவே, மேற்குறிப்பிட்ட நாள்களில் கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றாா் அவா்.