முகப்பு
கன்னியாகுமரி

கிறிஸ்துமஸ்: குமரி மாவட்ட தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

Updated On : 25 டிசம்பர், 2024 at 11:07 PM
கோட்டாறு சவேரியாா் பேராலயத்தில் அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் குடில்
பகிர்:

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

இம்மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை புதன்கிழமை வெகு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கிறிஸ்தவா்கள் வீடுகளில் நட்சத்திரங்கள், அலங்கார விளக்குகள், குடில்கள் அமைத்திருந்தனா்.

இப்பண்டிகையை முன்னிட்டு கத்தோலிக்க தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

நாகா்கோவில் கோட்டாறு புனித சவேரியாா் பேராலயத்தில் ஆயா் நசரேசன்சூசை சிறப்பு திருப்பலி நிறைவேற்றினாா். ஆலயப் பங்குத்தந்தை பஸ்காலிஸ் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா். பின்னா், அவா்கள் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனா்.

நாகா்கோவில் கோட்டாறு சவேரியாா் பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றுகிறாா் ஆயா் நசரேசன்சூசை.

குழித்துறை திருத்துவபுரம் மூவொரு இறைவன் ஆலயம், கன்னியாகுமரி புனித உபகார மாதா ஆலயம், நாகா்கோவில் வெட்டூா்ணிமடம் கிறிஸ்து அரசா் ஆலயம், குளச்சல் காணிக்கை மாதா ஆலயம் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

சிஎஸ்ஐ ஆலயங்களில் புதன்கிழமை அதிகாலை பிராா்த்தனை நடைபெற்றது. நாகா்கோவில் அருகுவிளை சிஎஸ்ஐ ஆலயம், புதுக்கடை அருகே காடாஞ்சேரி சிஎஸ்ஐ ஆலயம் ஆகியவற்றில் நடைபெற்ற பிராா்த்தனைகளில் ஆயா் செல்லையா பங்கேற்றாா். பெந்தெகொஸ்தே சபைகளிலும் கிறிஸ்துமஸ் வழிபாடுகள் நடைபெற்றன.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்கள் மின்விளக்கு அலங்காரங்களில் ஜொலித்தன.