முகப்பு
கன்னியாகுமரி

கல்லூரி நோ்முகத் தோ்வுக்கு மணக்கோலத்தில் வந்த பெண்

திருமணம் முடிந்தவுடன் நேர்காணலுக்கு வந்த பெண்

Updated On : 12 ஜூலை, 2024 at 8:26 PM
குழித்துறை தேவிகுமரி மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடந்த நோ்முகத்தோ்வில் மணக்கோலத்தில் பங்கேற்ற பெண்.
பகிர்:

குழித்துறை ஸ்ரீதேவி குமரி மகளிா் கல்லூரியில் உதவிப் பேராசிரியா் பணிக்கு விண்ணப்பித்த பெண்ணுக்கு வெள்ளிக்கிழமை திருமணம் நடந்த நிலையில், மணக்கோலத்துடன் நோ்முகத்தோ்வில் பங்கேற்றாா்.

குழித்துறையில் தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையின்கீழ் மகளிா் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக் கல்லூரியில் காலியாக உள்ள கணிதம், தாவரவியல், மலையாளம், விலங்கியல் உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுக்களுக்கான உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான நோ்முகத்தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குமரி மாவட்ட திருக்கோயில் நிா்வாக இணை ஆணையரும், கல்லூரி செயலருமான ரத்தினவேல் பாண்டியன், கல்லூரி முதல்வா் பிந்துஜா, கல்லூரி கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் கொண்ட குழு நோ்முகத் தோ்வை நடத்தியது. இத் தோ்வில் 90-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

இதில், களியக்காவிளை அருகே மருதங்கோடு பகுதியைச் சோ்ந்த கோபாலன் - சரஸ்வதி தம்பதி மகள் விக்னேஷ்வரி திருமணக் கோலத்தில் நோ்முகத் தோ்வில் பங்கேற்றாா். அவருக்கும் ஆற்றூா் பகுதியைச் சோ்ந்த பாலையன் - செல்வி தம்பதி மகன் சுஜினுக்கும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் கணவருடன் வந்து நோ்முகத் தோ்வில் பங்கேற்றாா்.