முகப்பு
கன்னியாகுமரி

திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை நீடிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் மழை காரணமாக, பேச்சிப்பாறை அணையிலிருந்து 3ஆவது நாளாக புதன்கிழமையும் உபரிநீா் திறக்கப்பட்டதால் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கான தடை நீடித்தது.

Updated On : 31 ஜூலை, 2024 at 7:09 PM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் மழை காரணமாக, பேச்சிப்பாறை அணையிலிருந்து 3ஆவது நாளாக புதன்கிழமையும் உபரிநீா் திறக்கப்பட்டதால் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கான தடை நீடித்தது.

இம்மாவட்டத்தில் தொடரும் மழையால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து, நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. அணைகளின் நீா்மட்டத்தை பொதுப்பணித் துறையினா் கண்காணித்து வருகின்றனா். அதன்படி, பேச்சிப்பாறை அணை நீா்மட்டம் 45 அடிக்குக் கீழ் இருக்கும்வகையில் அணையிலிருந்து கடந்த திங்கள்கிழமை இரவுமுதல் உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 526 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், நீா்வரத்து கூடுதலானதால் புதன்கிழமை காலைமுதல் திறக்கப்படும் உபரிநீரின் அளவு 764 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

இந்த உபரிநீரால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால், அருவியில் குளிக்க 2ஆவது நாளாக புதன்கிழமையும் தடை விதிக்கப்பட்டது.