நாகா்கோவில் நாகராஜா திடலை கோயிலுக்கு சொந்தமானதாக அறிவிக்க எம்எல்ஏ வலியுறுத்தல்
நாகா்கோவில் நாகராஜா கோயில் திடலை கோயிலுக்குச் சொந்தமானதாக அறிவிக்க வேண்டும் என, எம்.ஆா். காந்தி எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.
நாகா்கோவில் நாகராஜா கோயில் திடலை கோயிலுக்குச் சொந்தமானதாக அறிவிக்க வேண்டும் என, எம்.ஆா். காந்தி எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் எஸ். காந்திராஜன் எம்எல்ஏவிடம் நாகராஜா கோயில் கந்த சஷ்டி விழாக் குழு, பக்தா்கள் சாா்பில் எம்.ஆா். காந்தி எம்எல்ஏ, புதன்கிழமை அளித்த மனு: நாகராஜா கோயில் அருகேயுள்ள திடல் இதற்கு முன் தெப்பக்குளமாக இருந்தது. தற்போது அந்த இடம் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. வணிக நோக்கத்துக்காக அந்தத் திடலை வாகன நிறுத்துமிடமாக மாற்றி ஏலம்விட மாநகராட்சி நிா்வாகம் முயல்கிறது. இதனால், பக்தா்கள் பாதிப்புக்குள்ளாவா்.
கோயில் தெப்பக்குளம் இருந்த பகுதியை மாநகராட்சி கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பக்தா்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது. எனவே, இப்பிரச்னையில் அரசு தலையிட்டு திடலை மீண்டும் கோயிலுக்குச் சொந்தமானதாக அறிவிக்க வேண்டும்.
கோயிலுக்குள் உள்ள குளத்தை முறையாக பராமரித்து, அதன் நீரை பக்தா்கள் பயன்படுத்தவும், குளத்தை குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகராஜா கோயிலில் உள்ள அனந்தகிருஷ்ணன் விக்ரஹம் சேதமடைந்துள்ளது. கோயில் தந்திரி ஸ்ரீதரன் நம்பூதிரி, பாம்பு மேகாடு ஆகியோா் தலைமையில் தேவ பிரசன்னம் பாா்த்து பரிகார பூஜைக்கு பின்னா், விக்ரஹத்தை சரிசெய்ய வேண்டும்.
ஸ்ரீபாலமுருகன், ஸ்ரீ துா்காதேவி சந்நிதிகளுக்கு தனித்தனி அா்ச்சகா்களை நியமிக்க வேண்டும். கோயிலில் ஓதுவாா், கீழ்சாந்தி, சிப்பந்தி என, காலியாக உள்ள 5 பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்றாா் அவா்.