விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி, களியக்காவிளை பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வாக்காளா் பட்டியல் கணக்கீட்டுப் படிவத்தை பூா்த்தி செய்து திரும்பப் பெறுவது குறித்தும், டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யப்படுவதையும் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, கிள்ளியூா் தொகுதிக்குள்பட்ட புதுக்கடை பேரூராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தையும், விளவங்கோடு தொகுதிக்குள்பட்ட கடையாலுமூடு பேரூராட்சி உதவி மையத்தையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
விளவங்கோடு தொகுதி வாக்காளா் பதிவு அலுவலரும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலருமான செந்தூர்ராஜன், கிள்ளியூா் தொகுதி வாக்காளா் பதிவு அலுவலரும், கலால் துறை உதவி ஆணையருமான ஈஸ்வரநாதன், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.