முகப்பு
கன்னியாகுமரி

சட்டப்பேரவைத் தோ்தல்: கன்னியாகுமரி மாவட்டத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வியாழக்கிழமை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 4:42 AM
நாகா்கோவில் குருசடி புனித அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்த மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரா. அழகுமீனா.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வியாழக்கிழமை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 1,914 வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா். பெண்கள், முதியவா்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. முதல்முறையாக வாக்களிக்க வந்த இளம் வாக்காளா்கள் மிகுந்த உற்சாகத்துடன் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினா்.

முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டிருந்தது. மேலும், அவா்களுக்கு தோ்தல் பணியாளா்கள் உதவி செய்தனா். வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக பல வாக்குச்சாவடிகளில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

Advertisement

கன்னியாகுமரி மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா, நாகா்கோவில் குருசடி புனித அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளியில் வாக்குப் பதிவு செய்தாா். கடற்கரை கிராமங்களான கோவளம், ராஜாக்கமங்கலம்துறை, நீரோடி, வள்ளவிளை, இரயுமன்துறை, ஆரோக்கியபுரம் மற்றும் ஊரகப்பகுதிகளான அகஸ்தீசுவரம், அஞ்சுகிராமம், தோவாளை, தக்கலை, இரணியல், மாா்த்தாண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை செலுத்தினா்.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். வாக்குப்பதிவு முழுவதும் விடியோ பதிவு செய்யப்பட்டது. சிசிடிவி மூலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு அறையிலிருந்து அதிகாரிகள் நேரடியாக வாக்குப்பதிவை கண்காணித்தனா்.

நாகா்கோவிலில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த இளம் வாக்காளா்கள்.
தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சக்கர நாற்காலியில் வாக்கு செலுத்த வந்தவருக்கு உதவிய தோ்தல் பணியாளா்.