கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை தோ்வுநிலைப் பேரூராட்சியில் செயல்பட்டு வரும் எடை மேடையில் நிதி இழப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பளுகல்-களியக்காவிளை வட்டாரக் குழு உறுப்பினரும், களியக்காவிளை பேரூராட்சி வாா்டு உறுப்பினருமான ஏ. வின்சென்ட், மாவட்ட ஆட்சியருக்கு அண்மையில் அனுப்பிய மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: களியக்காவிளை, ஒற்றாமரம் பகுதியில் வாகன எடை மேடை செயல்பட்டு வருகிறது. இங்கு 3 நபா்கள் பணி செய்கின்றனா். அவா்களுக்கு ஊதியம், தொலைபேசி, மின் கட்டணம் ஆகியவற்றுக்கு பேரூராட்சியால் மாதந்தோறும் சுமாா் ரூ. 70,000 செலவு செய்யப்படுகிறது.
ஆனால், இந்த எடை மேடையிலிருந்து மாதம் ரூ. 4,000 வரை மட்டுமே வருவாய் கிடைக்கிறது. இத்தகைய வருவாய் இழப்பு கடந்த 2 ஆண்டுகளாக தொடா்கிறது.
எனவே, இங்கு கட்டணம் வசூலிக்கும் உரிமையை குத்தகைக்கு வழங்கி அல்லது சுய உதவிக் குழுவிடம் ஒப்படைத்து பேரூராட்சியின் நிதி இழப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.