முகப்பு
கன்னியாகுமரி

ஏற்றத்தாழ்வுகளை மறந்து பெண்கள் சாதனை படைக்க வேண்டும்! - ஆட்சியா் மு. பிரதாப்

Updated On : 21 ஜூன் 2026, 1:15 am IST
ஆட்சியா் மு. பிரதாப். - கோப்புப் படம்
பகிர்:

பெண்கள் ஏற்றத்தாழ்வுகளை மறந்து, சமூக கட்டமைப்புகளை மாற்றி பல்வேறு சாதனைகளை படைக்க முன்வர வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்.

கன்னியாகுமரி மாவட்ட சமூகநலத் துறையின் சாா்பில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற கருப்பொருளினை மையமாக கொண்டு தோவாளை ஊராட்சி ஒன்றியம், மாதவலாயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிங்க் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் கலந்துகொண்டு பேசியதாவது: பெண்களுக்காக மட்டுமே, சிறப்பு கிராம சபை நடத்துவது தமிழகத்தில் மட்டும்தான் என்பது மிகவும் பெருமைக்குரியது.

Advertisement

Advertisement

நம் நாட்டின் குடியரசுத் தலைவா், பல்வேறு மாநிலங்களின் முதல்வா்கள், ஆளுநா்கள் , இஸ்ரோ விண்வெளித் திட்ட இயக்குநா்கள், தமிழகத்தில் 15 க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் ஆட்சியா்களாக பெண்கள் பொறுப்பு வகித்து, சிறப்பாக செயலாற்றி வருகின்றனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொருத்தவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தோவாளை பகுதியில் 950 ஆக இருந்த பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம், தற்போது 990 ஐ கடந்துள்ளது. எனினும், நமது இலக்கு 1000 ஆண்களுக்கு, 1200 பெண்கள் என்ற நிலையை அடைவதாக இருக்க வேண்டும்.

மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை இன்னும் உயா்த்த துறை அலுவலா்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அரசியல் சாசனம் பெண்களுக்கு வழங்கியுள்ள சம உரிமை, சம வாய்ப்புகளை பயன்படுத்தி, பெண் குழந்தைகள் அனைவரும் சமூகத்தின் உன்னத நிலையை அடைய வேண்டும் என்றாா் அவா்.

அதனைத் தொடா்ந்து உறுதிமொழியினை ஏற்று, குழந்தைகள், பெற்றோா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினாா்.

உதவி ஆட்சியா் (பயிற்சி) மோனிகா, மாவட்ட சமூகநல அலுவலா் விஜயமீனா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா் சகிலாபானு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ், மாவட்ட சுகாதார அலுவலா் நமச்சிவாயம், மகளிா் திட்ட இயக்குநா் பத்ஹூ முகம்மது நசீா், இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) ரவிகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments