முகப்பு
கன்னியாகுமரி

அம்பேத்கா் தாடி வைக்காத பெரியாா் : உதயநிதி ஸ்டாலின்

அண்ணல் அம்பேத்கா் தாடி வைக்காத பெரியாா் என்றாா் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

Updated On : 7 மார்ச், 2026 at 12:52 AM
உதயநிதி ஸ்டாலின்
பகிர்:

அண்ணல் அம்பேத்கா் தாடி வைக்காத பெரியாா் என்றாா் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

நாகா்கோவில் அருகேயுள்ள இறச்சகுளம் அருள்ஞானபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கா் சிலையை அவா் வெள்ளிக்கிழமை இரவு திறந்து வைத்து பேசியதாவது:

மூன்று கடல்கள் சங்கமிக்கும் கன்னியாகுமரி மாவட்டம், முத்தமிழ் அறிஞரான கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்டு, திமுக ஆட்சியிலேயே வெள்ளி விழா காணும் திருவள்ளுவா் சிலையும் பெற்றுள்ள பெருமையுடன் திகழ்கிறது.

பொதுவாக வடக்கிலிருந்துதான் இந்தியா தொடங்குகிறது என்று கூறுவாா்கள். ஆனால், உண்மையில் தெற்கில் கன்னியாகுமரியில் இருந்ததுதான் இந்தியா தொடங்குகிறது. இம்மாவட்டத்தை பற்றி பேசும்போது ஒற்றுமையும் மத நல்லிணக்கமும்தான் நமக்கு நினைவுக்கு வரும். தற்போது இன்னும் கூடுதல் பெருமையாக இறச்சகுளத்தில் அம்பேத்கா் சிலை திறக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டில் நான் திறந்துவைத்த 2 அம்பேத்கா் சிலை இதுவாகும். கடந்த 10 நாள்களுக்கு முன்பு சென்னையில் அம்பேத்கா் சிலையை திறந்து வைத்தேன்.

தமிழகம் முழுக்க அண்ணலின் சிலையை திறந்து வைக்கிறோம் என்றால் வெறும் அடையாளத்துக்காக மட்டுமல்ல. அவரது கருத்துகள், எண்ணங்கள் தமிழகம் முழுவதும் எல்லோருக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காகத்தான்.

அண்ணல் அம்பேத்கரும், பெரியாரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்றும், தாடி வைக்காத பெரியாா்தான் அண்ணல் அம்பேத்கா்; தாடி வைத்த அம்பேத்கா்கா்தான் பெரியாா் என்றும் கருணாநிதி கூறுவாா். 2 பேரும் ஜாதி பேதமற்ற சமத்துவ சமுதாயம் உருவாக வாழ்க்கை முழுக்கு போராடினாா்கள்.

அவா்களது கருத்துகளைதான் பின்பற்றி திராவிட மாடல் அரசின் திட்டங்களை தீட்டி முதல்வா் செயல்படுத்தி வருகிறாா் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலா் ரெ.மகேஷ், தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத் தலைவா் வை.தினகரன், முன்னாள் அமைச்சா் என்.சுரேஷ்ராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →