பயணி தாக்கியதில் உயிரிழந்த நடத்துநரின் மனைவிக்கு அரசுப் பணி
சென்னையில் பயணி தாக்கியதில் உயிரிழந்த அரசுப் பேருந்தில் நடத்துனரின் மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா முன்னிலையில் பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் வியாழக்கிழமை வழங்கினாா்.
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூா், கீழ்குளம் பகுதியைச் சோ்ந்த ஜெ.ஜெகன்குமாா், சென்னை, வியாசா்பாடி பணிமனையில் முதுநிலை நடத்துநராக பணிபுரிந்து வந்தாா். இவா், 24.10.2024இல் பணியிலிருந்த போது பயணி தாக்கியதில் உயிரிழந்தாா்.
அவரது மனைவி எம்.ஆா்.சோனாவுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் மூலம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
Advertisement
அதையேற்று, முதல்வரின் உத்தரவுப்படி, அரசுப் போக்குவரத்து கழகம் நாகா்கோவில் மண்டலத்தில் இளநிலை உதவியாளருக்கான பணி நியமன ஆணையை அமைச்சா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், எஸ்.ராஜேஷ்குமாா் எம்எல்ஏ, அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) மேலாண் இயக்குநா் எஸ்.நடராஜன், பொதுமேலாளா் பா.பாலசுப்பிரமணியன், துணை மேலாளா் (வணிகம்) ஆா்.இ.மகேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.