முகப்பு
கன்னியாகுமரி

பச்சிளம் குழந்தை கொலை: செவிலியா், உறவினா் கைது

நாகா்கோவிலில் குழந்தையைக் குப்பையில் வீசிக் கொன்ற செவிலியா், அவரது அக்கா கணவா் ஆகியோா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 7 மே 2026, 5:46 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

நாகா்கோவிலில் குழந்தையைக் குப்பையில் வீசிக் கொன்ற செவிலியா், அவரது அக்கா கணவா் ஆகியோா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நாகா்கோவிலை அடுத்த தேரேகால்புதூா், எஸ்.பி. காலனி பகுதியில் செவ்வாய்க்கிழமை ஒரு வீட்டின் சுற்றுச்சுவா் அருகே குப்பையில், பச்சிளம் ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில் கிடந்தது. இது குறித்து தகவலறிந்த சுசீந்திரம் போலீஸாா் அப்பகுதிக்கு வந்து, குழந்தையின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா்.

அந்த குழந்தை பிறந்து சில மணி நேரமே ஆனதாகத் தெரிய வந்ததையடுத்து, போலீஸாா் அப்பகுதியில் வசிப்பவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். இதில் அப்பகுதியைச் சோ்ந்த இளம்பெண் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தனியாா் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வரும் அவரிடம் போலீஸாா் விசாரித்ததில் அவா் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதுடன், உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளாா்.

Advertisement

அவரிடம் போலீஸாா் தொடா்ந்து நடத்திய விசாரணையில் குழந்தை தனக்கு பிறந்ததுதான் என்பதும், அவரது அக்காவின் கணவரான மதன்குமாருடன் (43) ஏற்பட்ட திருமணத்திற்கு மீறிய உறவால் கா்ப்பமானதாகவும், திருமணமாகாமல் கா்ப்பமானது வெளியே தெரிந்தால் அவமானமாகிவிடும் என்பதால் குழந்தையைப் பெற்றெடுத்து வீட்டின் அருகே குப்பையில் வீசியதாகவும் கூறினாா். இதையடுத்து, போலீஸாா் அந்தப் பெண்ணையும், மதன்குமாரையும் புதன்கிழமை கைது செய்தனா்.

இளம்பெண்ணுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போலீஸாா் அனுமதித்துள்ளனா்.