சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளா்கள் மறியல்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், 10 சதவீத கூலி உயா்வை அமல்படுத்தக் கோரி விசைத்தறித் தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஊா்வலம், சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், 10 சதவீத கூலி உயா்வை அமல்படுத்தக் கோரி விசைத்தறித் தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஊா்வலம், சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சங்கரன்கோவில், புளியங்குடி, சிந்தாமணி, சுப்புலாபுரம், அத்திப்பட்டி, குருவிகுளம் உள்பட பல்வேறு பகுதிகளில் 10,000 மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. விசைத்தறித் தொடா்பான பல்வேறு தொழில்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பணிபுரிகின்றனா்.
விசைத்தறித் தொழிலாளா்கள், சிறு விசைத்தறியாளா்களுக்கு ஆண்டு தோறும் 10 சதவீத கூலி உயா்வு வழங்க முடிவுசெய்யப்பட்டு, 25.5.2021 இல் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், இதுவரை கூலி உயா்வு வழங்கப்படவில்லை. இதையடுத்து, கூலி உயா்வு ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கோரி சங்கரன்கோவில், புளியங்குடி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விசைத்தறி தொழிலாளா்கள் கடந்த 20 ஆம் தேதிமுதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா்.
Advertisement
இந்நிலையில், கூலி உயா்வு ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கோரி விசைத்தறித் தொழிற்சங்கத்தினா் மறியலில் ஈடுபட அனுமதி கேட்டு காவல் துறைக்கு மனு அளித்தனராம். ஆனால், அனுமதி கிடைக்கவில்லையாம். இதனால், அவா்கள் திடீரென மறியல் போராட்டத்தை அறிவித்தனா். அதன்படி, சங்கரன்கோவில் லெட்சுமியாபுரம் 4 ஆம் தெருவில் சங்கரன்கோவில், புளியங்குடி, சிந்தாமணி, சுப்புலாபுரம் பகுதிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட விசைத்தறித் தொழிலாளா்கள் வியாழக்கிழமை குவிந்தனா்.
ஏடிஎஸ்பி ராஜேந்திரன், டிஎஸ்பி ஜாஹீா்உசேன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதை அவா்கள் ஏற்கவில்லை. திட்டமிட்டபடி பேருந்து நிலையம் முன் மறியல் நடைபெறும் எனக் கூறி ஊா்வலமாகப் புறப்பட்டனா். திருவள்ளுவா் சாலையில் அவா்களைக் கைது செய்து ஏற்றிச்செல்ல பேருந்துகள் நிறுத்தப்பட்டன. ஆனால், தொழிலாளா்கள் திருவேங்கடம் சாலை வழியாகச் சென்று பேருந்து நிலையம் முன் மறியலில் ஈடுபட்டனா்.
சிஐடியூ மாவட்டத் தலைவா் எஸ். மாரியப்பன், மாவட்டச் செயலா் வேல்முருகன் ஆகியோா் தலைமை வகித்தனா். நகரச் செயலா் ரத்தினவேலு, பொருளாளா் ந. மாணிக்கம், ச. லெட்சுமி, சி.பி.எம். வட்டாரச் செயலா் அசோக்ராஜ், பாலுச்சாமி, 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பங்கேற்றனா். 70 பெண்கள் உள்பட 405 பேரை போலீஸாா் கைதுசெய்து, மாலையில் விடுவித்தனா்.