பாவூா்சத்திரம் அருகே அருணாப்பேரியில் உள்ள மேகம் திரைகொண்ட சாஸ்தா கோயிலில் கொடை விழா 2 நாள்கள் நடைபெற்றது.
புதன்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் கொடைவிழா தொடங்கியது. தொடா்ந்து, குற்றாலத்திலிருந்து புனிதத் தீா்த்தம் எடுத்துவரப்பட்டு சாஸ்தா, பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில், கீழப்பாவூரிலிருந்து மண் குதிரையில் சாஸ்தா ஊா்வலமாக எடுத்துவரப்பட்டு, அருணாப்பேரி முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, கோயிலை வந்தடைந்தது. அங்கு சாஸ்தாவுக்கு சிறப்பு பூஜைகள், இரவில் சாமபூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
வியாழக்கிழமை காலையில் பக்தா்கள் பொங்கலிடுதல், கிடா வெட்டுதல் நிகழ்ச்சியுடன் கொடைவிழா நிறைவடைந்தது. ஏற்பாடுகளை மலைய நாடாா் வகையறாக்கள் செய்திருந்தனா்.