ஆலங்குளம்: நெடுஞ்சாலைத் துறை அலட்சியம் காரணமாக ஆலங்குளத்தில் நான்கு வழிச்சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த லாரி ஓட்டுநர் மின்சாரம் பாய்ந்து பலியானார்.
திருநெல்வேலி - தென்காசி நான்கு வழிச்சாலைப் பணிகள் கடந்த 10 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆலங்குளம் தொட்டியான்குளத்தில் பாலம் அமைப்பதற்காக ஒரு பகுதியில் இருநது அதே இடத்தின் மற்றொரு பகுதிக்கு டிப்பர் லாரி மூலம் மண் எடுத்து கொட்டப்படும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. லாரியை தென்காசி கடப்போகத்தியைச் சேர்ந்த சடையாண்டி மகன் இசக்கி(48) இயக்கி வந்தார்.
இந்நிலையில் குளத்தின் குறுக்கே உயர் அழுத்த மின் கம்பி சற்று தாழ்வாக சென்றுள்ளது. இதை கவனிக்காத இசக்கி, மண் கொட்டுவதற்காக டிப்பர் லாரியின் தொட்டியை மேல்நோக்கி தூக்கியுள்ளார். அப்போது லாரி முன் பக்கமாக சென்ற போது மின்கம்பியோடு முன்பக்கம் வந்ததில், லாரி மீது மின்சாரம் பாய்ந்ததில் இசக்கி தூக்கி வீசப்பட்டு அதே லாரியின் டயரில் சிக்கினார்.
இதில் அவர் தலை நசுங்கி பலியானார். லாரி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்த்து. அதே நேரத்தில் மின் கம்பியை லாரி தொட்டி இழுத்ததில் மின் கம்பிகள் அறுந்ததுடன் 3 மின் கம்பங்கள் சாய்ந்தன.
தகவல் அறிந்து வந்த ஆலங்குளம் காவல் துறையினர் சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிக்க: ஆசிய கடற்கரை விளையாட்டு: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
நெடுஞ்சாலைத் துறை அலட்சியம் காரணமாக விபத்து:
சாலைப் பணி நடைபெறும் இடங்களில் முன்னதாகவே மின் கம்பங்கள், மின் கம்பிகள் செல்கின்றனவா என ஆய்வு செய்து அதன் பின்னர் பணிகள் தொடங்க அனுமதிக்க வேண்டும். ஆனால் எந்த ஆய்வும் செய்யாமல் பணிகள் நடைபெற்றதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.