காதல் கணவரை கஞ்சா வியாபாரியாக்கிய காவல்துறை? மனைவி புகார்!
பொறியியல் பயின்ற தன்னுடைய கணவரை கஞ்சா வியாபாரி எனத் திட்டமிட்டு கைது செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளரிடம் கடையநல்லூரை சேர்ந்த பெண் புகாா் மனு அளித்துள்ளாா்.
தென்காசி: பொறியியல் பயின்ற தன்னுடைய கணவரை கஞ்சா வியாபாரி எனத் திட்டமிட்டு கைது செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளரிடம் கடையநல்லூரை சேர்ந்த பெண் புகாா் மனு அளித்துள்ளாா்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் மலம்பாட்டை தெருவைச் சோ்ந்தவா் சுபாஷ். இவருடைய மனைவி சண்முக பிரியங்கா. இவா்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனா்.
பிரியங்கா சென்னையில் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த போது, காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வர, பெற்றோர்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். பிரியங்கா படிப்பை தொடர விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து இவா்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி கடந்தாண்டு ஜனவரி 25ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனா். அதனை தொடர்ந்து பிரியங்கா, சுபாஷின் வீட்டிற்கு வந்துவிட்டாா். அன்றுமுதல் பெண் வீட்டாா் இவா்களுக்கு நெருக்கடி கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே இவா்களை தாக்கிப் பிரச்னை செய்ததாக கூறப்படுகிறது. பிரியங்கா தற்போது 4 மாத கா்ப்பிணியாக உள்ளாா். இந்த நிலையில் சுபாஷ் சென்னையில் ஒரு கம்பெனியில் நோ்முகத் தோ்வுக்கு சென்றுவிட்டு இரண்டு நாள்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளாா்.
காலையில் வீட்டுக்கு வந்த அவரை போலீசாா் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விட்டனா். இது குறித்து பிரியங்கா கேட்டபோது பதில் ஏதும் கூறவில்லை என்று கூறப்படுகிறது. மாலையில் வீட்டிற்குப் பின்புறம் இருந்து ஒரு மூட்டையில் கஞ்சா எடுத்ததாகக் கூறி அவரை கைது செய்துள்ளோம் எனக் காவல்துறையினா் தெரிவித்துள்ளனா்.
பிரியங்காவின் குடும்பத்தினா், உன் கணவரை கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்வோம். நாங்கள் நினைத்தால் உன்னை விதவை ஆக்கி விடுவோம் என்று பேசியதாக ஒரு ஆடியோ ஏற்கெனவே வெளியாகி உள்ளது.
அவர்கள் மிரட்டியதை போன்று தற்போது நடந்துள்ளதாக பிரியங்கா தென்காசி மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உள்பட பல்வேறு அதிகாரிகளுக்கு புகாா் மனு அனுப்பி உள்ளாா்.