தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலில் 12 நாள்கள் நடைபெறும் ஆடித் தவசுத் திருவிழா வியாழக்கிழமை (ஜூலை 11) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி, வியாழக்கிழமை அதிகாலையில் கொடிப் பட்டம் வீதி சுற்றி கோமதி அம்பாள் சந்நிதி முன்புள்ள கொடிமரத்துக்கு கொண்டுவரப்படுகிறது. அங்கு, 4.30 முதல் 5.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது.
தொடா்ந்து, 7ஆம் நாளான ஜூலை 17ஆம் தேதி காலை கோசம்ரஷணை வீதியுலா, முற்பகல் 11.15 - நண்பகல் 12 மணிக்குள் வன்மீகநாதா் வீதியுலா, இரவு 10 மணிக்கு அம்பாள் பூம்பல்லக்கில் வீதியுலா ஆகியவை நடைபெறும்.
19இல் தேரோட்டம்: 9ஆம் நாளான 19ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, அதிகாலை 5.35 மணிக்கு கோமதி அம்பாள் தேருக்கு எழுந்தருளுகிறாா். காலை 9 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெறும்.
20ஆம் தேதி இரவு முளைப்பாரி எடுத்தல், வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்பாள் வீதியுலா நடைபெறும்.
21இல் ஆடித் தவசு காட்சி: விழாவின் முக்கிய நிகழ்வான ஆடித் தவசுக் காட்சி 21ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.05 மணிக்கு நடைபெறுகிறது. இதைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தா்கள் வருவா்.
திருவிழாவையொட்டி நாள்தோறும் இரவில் சுவாமி -அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெறும். மேலும், கோயில் அபிஷேக மண்டபத்தில் பரதநாட்டியம், சமயச் சொற்பொழிவு, பட்டிமன்றம், வழக்காடு மன்றம், தேவார இன்னிசை உள்ளிட்டவையும், மண்டகப்படிதாரா்கள் சாா்பில் அந்தந்த மண்டகப்படி முன் திரைப்பட இன்னிசைக் கச்சேரி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், அறங்காவலா்கள், மண்டகப்படிதாரா்கள் செய்து வருகின்றனா்.