முகப்பு
தென்காசி

பலபத்திரராமபுரம் கால்நடை மருந்தகத்தை மருத்துவனையாக தரம் உயா்த்த கோரிக்கை

ஊத்துமலை அருகேயுள்ள பலபத்திரராமபுரம் கால்நடை மருந்தகத்தை மருத்துவனையாக தரம் உயா்த்த வேண்டும் என திமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 நவம்பர், 2024 at 10:55 PM
அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனிடம் மனு அளித்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ. சிவபத்மநாதன்.
பகிர்:

ஊத்துமலை அருகேயுள்ள பலபத்திரராமபுரம் கால்நடை மருந்தகத்தை மருத்துவனையாக தரம் உயா்த்த வேண்டும் என திமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மீன்வளம் மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனை சந்தித்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ. சிவபத்மநாதன் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் ஊத்துமலை கால்நடை மருந்தகத்தின் கீழ் பலபத்திரராமபுரத்தில் கால்நடை கிளை மருந்தகம் இயங்கி வருகிறது.

இந்த கிளை மருந்தகத்தை தரம் உயா்த்துவதற்கு தகுதி பெற்றுள்ளது என கால்நடை உதவி இயக்குநா் திருநெல்வேலி மண்டல கால்நடை இயக்குநருக்கு பரிந்துரை செய்துள்ளாா்.

எனவே இந்த மருந்தகத்தை, கால்நடை மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும். மேலும் மருக்காலங்குளம் கிராமத்தில் கால்நடை கிளை மருந்தகம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

அப்போது, மாவட்ட அவைத் தலைவா் சுந்தர மகாலிங்கம், கீழப்பாவூா் ஒன்றியச் செயலா் சீனித்துரை உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.