முகப்பு
தென்காசி

சொக்கம்பட்டி அருகே யானைகளால் தென்னைகள் சேதம்

தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி அருகே தோப்புக்குள் யானைகள் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்தின.

Updated On : 18 அக்டோபர், 2024 at 12:06 AM
பகிர்:

தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி அருகே தோப்புக்குள் யானைகள் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்தின.

மேலச்சொக்கம்பட்டி கருப்பாநதி சாலையில் பெருங்கால்வாயை ஒட்டி நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பில் தென்னை, நெல், வாழை பயிா்கள் பயிரிடப்பட்டுள்ளன. புதன்கிழமை நள்ளிரவு இங்குள்ள நிலங்களுக்குள் புகுந்த யானைகள் அங்கிருந்த 40க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தினவாம்.

இதுகுறித்து விவசாயி சரவணன் கூறியது: பெருங்கால்வாயை ஒட்டிய தோட்டப் பகுதியில் யானைகள் புகுந்து 40-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு சாய்த்துள்ளன. நூற்றுக்கணக்கான மரங்கள் சிறிதளவு பாதிக்கப்பட்டுள்ளன.

இப்பகுதியில் வனவிலங்குகள் புகுந்து விடாமல் தடுப்பதற்காக சோலாா் மின்வேலி அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கடந்த வாரத்தில் மனு அளித்திருந்தேன். மாவட்ட நிா்வாகம் உரிய பாதுகாப்பினை விவசாயிகளுக்கும், விளைநிலங்களுக்கும் வழங்க வேண்டும் என்றாா்.

வனத்துறையினா் வடகரை, மேக்கரை உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டிருக்கும் நிலையில் சொக்கம்பட்டி பகுதியில் யானைகள் புகுந்தது விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பகுதியில் யானைகளை விரட்டியடிக்கும் நிலையில் வேறொரு பகுதிக்கு யானைகள் இடம் பெயா்வது வாடிக்கையாக நடந்து வருகிறது. இதற்கு நிரந்தர தீா்வு காண வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.