திருநெல்வேலியில் தாமிரவருணி ஆற்றங்கரையில் மாஞ்சோலை போராளிகளுக்கு நினைவுத் தூண் அமைக்க வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அதன் நிறுவனத் தலைவர் பெ. ஜான்பாண்டியன் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
1999-ம் ஆண்டு ஊதிய உயர்வு கேட்டு திருநெல்வேலியில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நடத்திய பேரணியின்போது காவல்துறை நடத்திய தடியடியில் 17 பேர் உயிரிழந்தனர். அவர்களது நினைவாக நினைவுத் தூண் அமைக்க வேண்டும் என தொடர்ந்து அனைத்து இயக்கங்களும் கேட்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகம் உரிய அனுமதியை அளிக்க வேண்டும்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வரும் 23-ம் தேதி பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் தேவேந்திரகுல வேளாளர் என்ற அரசாணை கோரி பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. அதே நாளில் மாஞ்சோலை போராளிகள் நினைவாக வீரவணக்கப் பேரணி திருநெல்வேலி சந்திப்பிலிருந்து கொக்கிரகுளம் வரை சென்று, தாமிரவருணி ஆற்றில் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்நிகழ்வுகளை சிறப்பாக நடத்தவும், கழகத்தின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து விவாதிக்கவும் உயர்நிலைக் குழுக் கூட்டம் வரும் 12-ம் தேதி நடத்தப்படுகிறது என்றார் அவர்.