மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மூவருக்கு 8 ஆண்டு சிறை
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த மூவருக்கு தலா 8 வருடம் சிறைத் தண்டனையும், தலா ரூ. 1 லட்சத்து ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த மூவருக்கு தலா 8 வருடம் சிறைத் தண்டனையும், தலா ரூ. 1 லட்சத்து ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி அருகேயுள்ள டி. சவேரியார்புரம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மனைவி அமுதா (38). வாய் பேச முடியாத காதுகேளாத பெண்ணான இவரது கணவர் மாரியப்பன் 9 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.
தந்தை சக்திவேலுடன் வசித்து வந்த அமுதா ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தாராம். கடந்த 18.11.2013 அன்று வழக்கம்போல் அமுதா தனது உறவினரான கனகவல்லி (13) என்பவருடன் அங்குள்ள தோமஸ்புரம் காட்டுப்பகுதியில் ஆடு மேய்க்க சென்றாராம்.
அப்போது அங்கு வந்த டேவிஸ்புரத்தை சேர்ந்தவர் சண்முகவேல் மகன் சரவணமுத்து (26), முனியசாமி மகன் செல்வம் (38), செளந்திரபாண்டியன் மகன் லட்சுமணக்குமார் (25) ஆகிய மூவரும் அமுதாவுக்கு பாலியல் தொந்தரவு அளித்தனர்.
பின்னர் அமுதாவை மூவரும் காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்றதாக கூறப்படுகிறது. அமுதா உடன் சென்ற கனகவல்லி, தாளமுத்துநகர் காவல்நிலையத்திற்கு சென்று தகவல் தெரிவித்தார். விரைந்து சென்ற போலீஸார் அமுதாவிடம் பாலியல் முயற்சியில் ஈடுபட்ட சரவணமுத்து, செல்வம் ஆகியோரை பிடித்தனர். தப்பி சென்ற லட்சுமணக்குமாரையும் போலீஸார் கைது செய்தனர்.
இவ்வழக்கை விசாரித்த திருநெல்வேலி மாவட்ட 2 ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஏ. அப்துல்காதர், குற்றவாளிகள் சரவணமுத்து, செல்வம், லட்சுமணக்குமார் ஆகியோருக்கு இந்திய தண்டனைச் சட்டம் 354 பி பிரிவின் கீழ் தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்தார்.
இந்திய தண்டனைச் சட்டம் 341 ன் கீழ் மூவருக்கும் தலா ஒரு வருடம் சிறையும், தலா ரூ. 1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
அபராதத் தொகை ரூ. 3 லட்சத்தை அமுதாவுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், சிறை தண்டனையை மூவரும் தனித்தனியே அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.