2013ஆம் ஆண்டு நடைபெற்ற தகராறில் ஒருவரை அரிவாளால் வெட்டியதாக குற்றம் சாட்டப்பட்டவருக்கு அம்பாசமுத்திரம் சார்பு நீதிமன்றத்தில் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
பிரம்மதேசம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் முத்துசாமி (57). அதே பகுதியைச் சேர்ந்த இசக்கிப் பாண்டி (50), முத்துசாமியின் அண்ணன் மகனிடம் தகராறில் ஈடுபட்டாராம். இதுதொடர்பாக முத்துசாமி, இசக்கிப் பாண்டியை தட்டிக் கேட்டாராம். அப்போது ஏற்பட்ட தகராறில் முத்துசாமி அரிவாளால் இசக்கிப் பாண்டியைத் தாக்கினாராம். இதில் காயமடைந்த இசக்கிப்பாண்டி மருத்துவனை அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அம்பாசமுத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அம்பாசமுத்திரம் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் சார்பு நீதிபதி கவிதா, வியாழக்கிழமை முத்துசாமிக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் கோமதிசங்கர் ஆஜரானார்.