நெல்லையில் முன்னாள் காவலர் கொலை வழக்கு: இருவர் கைது
திருநெல்வேலியில் முன்னாள் காவலர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.
திருநெல்வேலியில் முன்னாள் காவலர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.
திருநெல்வேலி சந்திப்பு அருகேயுள்ள சிந்துபூந்துறையைச் சேர்ந்தவர் மணிகண்டன் (40). இவர், காவலராகப் பணியாற்றிவிட்டு விருப்ப ஓய்வு பெற்றார். அதன்பின்பு வெளிநாட்டிற்கு சென்ற மணிகண்டன், கடந்த ஓராண்டிற்கு முன்பு சொந்த ஊர் திரும்பினார். பின்னர் அவர் வியாபாரம் செய்து வந்தார். தச்சநல்லூரில் உள்ள பெற்றோரை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் கடந்த 26 ஆம் தேதி வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது மர்மநபர்களால் உடையார்பட்டி பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தச்சநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக தச்சநல்லூரைச் சேர்ந்த ராமநம்பி (28), பாலகண்ணன் (22) ஆகியோரை போலீஸார் புதன்கிழமை கைது செய்து விசாரணை நடத்தினர். பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் கொலை நிகழ்ந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.