சட்டம்-ஒழுங்குக்கு பொறுப்பேற்க திமுக விரும்பவில்லை: அண்ணாமலை கண்டனம்
விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை சம்பவத்தில் திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்
விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை சம்பவத்தில், தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதாக திமுக அரசுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களுடன் அண்ணாமலை பேசுகையில், எரிவாயு தட்டுப்பாடு குறித்து பொதுமக்களிடையே பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். நிலைமை நம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகக் கூறியுள்ள பிரதமர் மோடி, பொதுமக்களிடையே பீதியையும் அச்சத்தையும் பரப்ப வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.
நமது இரு கப்பல்கள், ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து மிகவும் பாதுகாப்பாக உள்ளன. அவை நம் நாட்டுக்கு இயற்கை எரிவாயுவை கொண்டு வருகின்றன.
Advertisement
ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் நடத்திவரும் அதே வேளையில், இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கப்படவில்லை. ஆகையால், பீதியையும் அச்சத்தையும் பரப்ப வேண்டாம் என்று திமுக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
விளாத்திகுளத்தில் மார்ச் 10 ஆம் தேதியில் 17 வயது சிறுமி, தனது வீட்டுக்கு அருகே உள்ள வயலுக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பவில்லை என கொளத்தூரில் உள்ள காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர். ஆனால், அங்கு காவல்துறையினர் புகாரை ஏற்க மறுத்ததால், மறுநாள் (மார்ச் 11) காலையில் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கச் சென்றனர். ஆனால், அங்கும் சிறுமியின் பெற்றோரை காவல்துறையினர் அவமதித்துள்ளனர்.
தொடர்ந்து, மறுநாள் மதியம் 1.30 மணியளவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அச்சிறுமியின் உடலை மீட்டுள்ளனர்.
அனைவரது இதயத்தையும் நொறுக்கும் இந்தச் சம்பவத்தைக் கடுமையாக கண்டிக்கிறோம். ஏனெனில், காவல்துறையினர் தங்களின் கடமையைக்கூட செய்ய முடியவில்லை. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்குக்கு யாரும் பொறுப்பேற்க விரும்பவில்லை. தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து பெருமளவில் அதிகரித்து வருகிறது என்று தெரிவித்தார்.
A state of law and order in Tamil Nadu where nobody wants to take responsibility, BJP Leader Annamalai condemns DMK Govt