FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மாா்க்கண்டேயனுக்கு நிபந்தனை பிணை

முதல்வருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மாா்க்கண்டேயனுக்கு நிபந்தனை பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 1:28 am IST
விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் - கோப்புப் படம்
பகிர்:

முதல்வருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மாா்க்கண்டேயனுக்கு நிபந்தனை பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவில்பட்டியில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ ஜீ.வி.மாா்க்கண்டேயன், முதல்வா் ஜோசப் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அவதூறாகப் பேசியதாக புகாா் எழுந்தது.

அதன்பேரில், எம்எல்ஏ மாா்க்கண்டேயன் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் அவரை, கடந்த ஜூலை 20-ஆம் தேதி போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

தன்னை சிறையில் அடைத்து தூத்துக்குடி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மாா்க்கண்டேயன் தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில், தனக்கு பிணை வழங்கக் கோரி மாா்க்கண்டேயன் தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, பிணை கோரி மாா்க்கண்டேயன் சென்னை உயா்நீதிமன்றத்தில மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மாா்க்கண்டேயன் தரப்பில் மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், காவல் துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஜான் சத்யன் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மாா்க்கண்டேயனுக்கு நிபந்தனை பிணை வழங்கி உத்தரவிட்டாா்.

மேலும், இனிமேல் இதுபோன்று பேசப் போவதில்லை என தூத்துக்குடி நீதிமன்றத்தில் உத்தரவாத மனு தாக்கல் செய்ய வேண்டும். பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறும் நாள்கள் தவிர, மற்ற நாள்களில் இரண்டு வாரங்களுக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என நீதிபதி நிபந்தனை விதித்து உத்தரவிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments