சிலிண்டருக்காக அலைக்கழிக்கப்பட்ட முதியவர் பலி!
சிலிண்டருக்காக அலைக்கழிக்கப்பட்ட முதியவர் பலியானது பற்றி...
பஞ்சாப் மாநிலத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த 66 வயது முதியவர் மாரடைப்பு ஏற்பட்டு பலியானார்.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் இறக்குமதி முடங்கியுள்ளது. இதனால் நாடு முழுவதும் கடந்த ஒரு வார காலமாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது.
இதனை சமாளிக்க வணிக உபயோக சிலிண்டர்களின் விநியோகம் முதல்கட்டமாக மத்திய அரசு நிறுத்தியுள்ளது. இருப்பினும், வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் சீராக விநியோகிக்கப்பட்டு வருவதாக விளக்கம் அளித்துள்ளது.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம், பர்னாலா மாவட்டத்தில் உள்ள செஹ்னாவில் வீட்டு உபயோக சிலிண்டர் வாங்குவதற்காக வெள்ளிக்கிழமை காலை நீண்ட வரிசையில் காத்திருந்த 66 வயது முதியவர் பூஷன் குமார் மித்தல் என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
சிலிண்டர் விநியோகிக்கும் நிறுவனத்துக்கு இரண்டு நாள்களாக அலைந்த முதியவர் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கே வந்து டோக்கன் பெற்றுள்ளார்.
சுமார் 130-க்கும் மேற்பட்டோருக்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு மணிநேரமாக காத்திருந்த முதியவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் பரிசோதித்து தெரிவித்துள்ளனர்.
பூஷன் குமாரின் குடும்பத்தினர் சிறிய மளிகைக் கடை நடத்தி வந்துள்ளனர். கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட மனைவி, திருமணமான மகளுடன் வசித்து வந்த பூஷன், நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வந்துள்ளார்.
இதனிடையே, உடற்கூராய்வு செய்யாமலேயே பூஷனின் உடலைக் குடும்பத்தினர் தகனம் செய்தனர்.