சொத்து வரி விதிப்பு குறித்து மறுஅளவீடு செய்வதற்கு ஆட்சேபம் தெரிவித்து, மேலப்பாளையத்தில் வெள்ளிக்கிழமை கடையடைப்பு நடத்தப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி பகுதியில் வீடுகள், கட்டடங்களின் அளவினை மறு அளவீடு செய்து சொத்து வரி நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் சொத்து வரி விதிப்பு குறித்து குடியிருப்பு, வணிகக் கட்டடங்களின் அளவுகளை மறு அளவீடு செய்து வரி விதிப்பை ஒரே விகிதாச்சார அடிப்படையில் நிர்ணயம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மாநகராட்சிப் பகுதியில் கட்டங்களின் அளவீடு செய்யும் நடைபெற்று வருகிறது. இந்நடவடிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்து மேலப்பாளையத்தில் வெள்ளிக்கிழமை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்துக்கு மேலப்பாளையம் அனைத்து வணிகர்கள் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்து கடையடைப்பு நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.