உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை மெக்சிகோவுக்கு மாற்ற வேண்டும்! - ஈரான் வலியுறுத்தல்!
அமெரிக்காவில் நடைபெறும் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகளை மெக்சிகோவுக்கு மாற்ற ஈரான் வலியுறுத்தல்...
அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை மெக்சிகோவுக்கு மாற்ற வேண்டுமென ஃபிஃபா நிர்வாகத்திடம் ஈரான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளின் தலைமையில் நடைபெறவுள்ளன.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கும், ஈரானுக்கும் இடையில் கடந்த பிப். 28 முதல் போர் நடைபெற்று வருவதால் ஈரானின் கால்பந்து வீரர்கள் அமெரிக்கா செல்வது மிகுந்த ஆபத்தானதாகக் கருதப்படுகிறது.
இத்துடன், அமெரிக்கா வரும் ஈரானிய கால்பந்து வீரர்களின் பாதுகாப்பிற்கு உறுதியளிக்க முடியாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
இதனால், அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற வேண்டுமென ஃபிஃபா நிர்வாகத்திடம் ஈரானின் கால்பந்து கூட்டமைப்புப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, மெக்சிகோவில் உள்ள ஈரானிய தூதரகம் திங்கள்கிழமை (மார்ச் 16) அன்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின் தாக்குதல்களில், கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
இதையடுத்து, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.