கார் சாகுபடிக்கு முன்பு கால்வாய்கள் தூர்வாரப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
அமலைச் செடிகளால் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ள பாசனக் கால்வாய்களை கார் பருவ சாகுபடிக்கு முன்னதாக தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமலைச் செடிகளால் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ள பாசனக் கால்வாய்களை கார் பருவ சாகுபடிக்கு முன்னதாக தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாமிரவருணி பாசனத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதில் பிரதான அணையான பாபநாசம் அணையின் மூலம் இவ்விரு மாவட்டத்தில் 11 கால்வாய்கள் மூலம் 86,107 ஏக்கர் நிலங்களும், மணிமுத்தாறு அணையில் பிரதான கால்வாய் மூலம் 24 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசனம் பெறுகின்றன.
இப்பாசனத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் கார் பருவ சாகுபடியும், நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பிசான பருவ சாகுபடியும் செய்யப்படுகிறது.
இப்பாசனத்தில் விவசாயத்தில் பிரதான பங்கு வகிக்கும் 11 கால்வாய்களின் மொத்த நீளம் 236 கி.மீ. ஆகும். கால்வாய்களில் அமைந்துள்ள மடை, நீர் போக்கி, மணற்போக்கி போன்றவை பராமரிப்பின்றி தூர்ந்து காணப்படுகின்றன. கால்வாய் கரைகளும் ஆங்காங்கே பலமிழந்து மழைக் காலங்களில் பெருமளவில் தண்ணீர் செல்லும்போது உடைப்பு ஏற்பட்டு மணல் மூட்டைகளால் சரி செய்யப்பட்டு வருகின்றன. இது தவிர அமலைச் செடிகள், காட்டாமணக்கு செடிகள் பெருமளவில் பாசனக் கால்வாய்களில் வளர்ந்து பரவிக் காணப்படுவதால் அணையில் திறக்கப்படும் தண்ணீர் கடை மடைக்கு செல்வதில் தடையாக உள்ளன.
கால்வாய்களின் குறுக்கேயுள்ள பாலங்கள், நீர்போக்கிகள் அமைந்துள்ள பகுதியில் அமலைச் செடிகள் அதிகளவில் தேங்கி இருப்பதால் நீரோட்டம் தடைபடுகிறது.
தண்ணீர் அடைப்பு காலமான ஏப்ரல், மே மாதங்களில் பொதுப்பணித் துறை மூலம் கால்வாய்களில் தேங்கி இருக்கும் அமலைச் செடிகளை அகற்றும் பணியினை மேற்கொள்ளவது வழக்கம். போதிய நிதி இல்லாததால் கடந்த சில ஆண்டுகளாக பாசனக் கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக பாசனத்திற்கு தண்ணீர் கிடைத்தும் முழுமையாக வயலுக்கு கொண்டு செல்வதில் தடை இருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
பிசான பருவ அறுவடை முடிந்து கால்வாய்களில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ள இந்த தருணத்தில், கால்வாய்களில் தேங்கி இருக்கும் அமலை, காட்டாமணக்கு செடிகளை முழுமையாக அகற்ற வேண்டும். இப்பணியை மேற்கொள்வதன் மூலம் வரும் ஜூன் மாதம் தொடங்கும் கார் பருவ சாகுபடிக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆகவே, கால்வாய்களில் தூர்வாரும் பணியினை மேற்கொள்ள பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.