பேருந்து கட்டணத்தை உயர்த்தி போக்குவரத்துக் கழக நிதி இழப்பை மக்கள் மீது திணிக்கக் கூடாது என மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி கூட்டமைப்பின் சார்பில் பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் செவ்வாய்க்கிழமை கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, திமுக கிழக்கு மாவட்டச் செயலர் இரா. ஆவுடையப்பன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்டச் செயலர் மு. அப்துல்வஹாப், மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் பொ.சிவபத்மநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், எம்.எச். ஜவாஹிருல்லா பேசியது: தமிழகத்தில் நடைபெற்று வரும் அதிமுக அரசு மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுவதால் தமிழக மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. பேருந்து கட்டணத்தை உயர்த்திய பின், எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் கண்துடைப்புக்காக கட்டணம் குறைக்கப்பட்டது. போக்குவரத்துக் கழகங்கள் சந்தித்து வரும் நிதிச்சுமையை மக்கள் மீது திணிக்கும் வகையில் பேருந்து கட்டணத்தை உயர்த்தியிருப்பது ஏற்புடையதல்ல. எனவே, முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என்றார்.
கூட்டத்தில், எம்.எல்.ஏ. க்கள் பூங்கோதை ஆலடிஅருணா, எச். வசந்தகுமார், டி.பி.எம். மைதீன்கான், முன்னாள் எம்.பி. க்கள் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், ச. தங்கவேலு, காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கே. சங்கரபாண்டியன், எஸ்.கே.எம். சிவக்குமார், எஸ். பழனிநாடார், மதிமுக மாவட்டச் செயலர்கள் தி.மு. ராஜேந்திரன், கே.எம்.ஏ. நிஜாம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் கே.ஜி. பாஸ்கரன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் எஸ். காசிவிஸ்வநாதன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் எல்.கே.எஸ். மீரான்முகைதீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் ஐ. உஸ்மான்கான், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டத் தலைவர் கரிசல் சுரேஷ், ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலர் கு.க. கலைகண்ணன், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தென்மண்டலச் செயலர் ஜெயச்சந்திர மோகன், சமத்துவ மக்கள் கழக மாவட்டச் செயலர் முத்துக்குட்டி உள்ளிட்டோர் பேசினர்.
ஏ.எல்.எஸ். லட்சுமணன் வரவேற்றார். மாநகர திமுக அவைத் தலைவர் வேலு என்ற சுப்பையா நன்றி கூறினார்.