நெல்லையில் ரூ. 8 லட்சம் நகை திருட்டு வழக்கு: நாகர்கோவில் இளைஞர் சிக்கினார்
திருநெல்வேலியில் கடந்த ஆண்டு ரூ. 8 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடுபோன வழக்கில் நாகர்கோவில் இளைஞர் போலீஸாரிடம் சிக்கினார்.
திருநெல்வேலியில் கடந்த ஆண்டு ரூ. 8 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடுபோன வழக்கில் நாகர்கோவில் இளைஞர் போலீஸாரிடம் சிக்கினார். அவரை பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து, நகைகளை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வடசேரியில் உள்ள கிருஷ்ணன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரிஜிஸ் (26). இவரை, நாகர்கோவில் போலீஸார் ஒரு வழக்கு தொடர்பாக பிடித்து விசாரணை நடத்தினராம். அப்போது அவர், பாளையங்கோட்டை வடக்கு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள சிவசாமி (48) என்பவர் வீட்டில் 2017ஆம் ஆண்டு அக்டோபரில் ரூ. 8.65 லட்சம் மதிப்பிலான நகைகள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றைத் திருடியது தெரியவந்ததாம். தகவலறிந்த பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸார், நீதிமன்ற உத்தரவின்பேரில் ரிஜிஸை காவலில் எடுத்து, கைது செய்து விசாரித்துவந்தனர்.
இதையடுத்து அவரை நீதிமன்றக் காவலுக்கு புதன்கிழமை அனுப்பிவைத்தனர். நகைகளை மீட்க தொடர் நடவடிக்கை எடுக்கப்படுவதாக போலீஸார் தெரிவித்தனர்.