பிளஸ்-2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள்
திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ்-2 முடித்த மாணவர்-மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டன.
திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ்-2 முடித்த மாணவர்-மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டன.
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 312 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் 123 தேர்வு மையங்களில் தேர்வை எழுதினர். 16 ஆயிரத்து 242 மாணவர்களும், 21 ஆயிரத்து 461 மாணவிகளும் என மொத்தம் 37 ஆயிரத்து 703 பேர் தேர்வு எழுதினர். அவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த 16 ஆம் தேதி வெளியானது.
இம் மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களில் 15 ஆயிரத்து 103 மாணவர்களும், 20 ஆயிரத்து 769 மாணவிகளும் என மொத்தம் 35 ஆயிரத்து 872 பேர் தேர்ச்சி பெற்றனர். இதைத் தொடர்ந்து தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் தோல்வியடைந்த மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண்சான்றிதழ்கள் அவர்கள் பயின்ற பள்ளியில் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டன. புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள், தங்களது பெற்றோருடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.