கங்கைகொண்டான் அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த காவலர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள அன்னைதெரசா நகரைச் சேர்ந்தவர் முருகேஷ் ஸ்ரீதர் (29). இவர், தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் காவலராகப் பணியாற்றி வந்தார். சனிக்கிழமை பணி முடிந்ததும் தனது மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டிக்கு சென்று கொண்டிருந்தாராம். கங்கைகொண்டான் அருகே துறையூர் பகுதியில் சென்றபோது பாலத்தில் மோதி மோட்டார்சைக்கிள் விபத்துக்குள்ளானதில் முருகேஷ் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.