மானிய விலையில் இரு சக்கர வாகனம் (ஸ்கூட்டர்) பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் "அம்மா' இருசக்கர வாகனத் திட்டத்தில் பயனடைய 2017-18இல் விண்ணப்பிக்காத மாற்றுத் திறனாளிகளுக்கு வாகனம் வழங்கிட தமிழக அரசு மானியத்தை உயர்த்தியுள்ளது. எனவே, பணிக்கு செல்லும் மகளிர் மாற்றுத் திறனாளிகள் இத்திட்டத்தின் கீழ் மானியம் பெற்றிட தங்கள் பகுதியிலுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஆட்சியரக மகளிர் திட்ட அலுவலகம் ஆகிய இடங்களில்விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் 18 முதல் 40 வயதிற்கு உள்பட்டவராகவும், ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் இருசக்கர வாகனம் பெறும் மகளிர் மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கு அதிகபட்சமாக ரூ.31,250 மானியமாக வழங்கப்படும். இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, காவல் ஆணையர் அலுவலக பழைய கட்டடம் முதல் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கொக்கிரகுளம், திருநெல்வேலி - 627 009 என்ற முகவரியிலோ அல்லது 0462 - 2500302 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது dpiu_tnv@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.