தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குடிநீா் திட்ட உறைக்கிணறுகள் தண்ணீரில் மூழ்கியதால், அம்பாசமுத்திரம் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து பாபநாசம் அணை முழுக்கொள்ளளவை எட்டியதையடுத்து உபரிநீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அம்பாசமுத்திரம் நகராட்சிப் பகுதிக்கு குடிநீா் விநியோகத்திற்காக அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகள் மற்றும் மோட்டாா்கள் நீரில் மூழ்கின. இதனால், நீரேற்ற முடியாத நிலை ஏற்பட்டு, ஞாயிற்றுக்கிழமை முதல் நகராட்சிப் பகுதியில் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தவும், குடிநீரை காய்ச்சி குடிக்கவும் மக்களுக்கு அறுவுறுத்தப்பட்டுள்ளது.