திருநெல்வேலியில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் தென்காசி கல்வி மாவட்டத்திலிருந்து சுமார் 783 பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருநெல்வேலி பிரிவு சார்பில், உலகத் திறனாய்வுத் திட்ட விளையாட்டுப் போட்டிகள் கல்வி மாவட்ட அளவில் நடைபெற்று வருகின்றன. தென்காசி கல்வி மாவட்டத்துக்கான இப்போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தொடக்க நிகழ்ச்சிக்கு இலஞ்சி ஆர்.பி. மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் கே.ஆறுமுகம் தலைமை வகித்து போட்டிகளைத் தொடங்கிவைத்தார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அ.ஜெயசித்ரா வரவேற்றார்.
100 மீ., 200மீ., 400 மீ. ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இதில் 6முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர் - மாணவிகள் சுமார் 783 பேர் பங்கேற்றனர்.
நீளம் தாண்டுதல் போட்டியில், வடகரை ஜாய் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.முகம்மது ஹர்சத் முதலிடமும், குற்றாலம் செய்யது மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.நடராஜ் இரண்டாமிடமும், நல்லூர் மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ். ராக்கேஷ் மூன்றாமிடமும் பிடித்தனர்.
குண்டு எறிதல் போட்டியில், பழைய குற்றாலம் கில்டன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி கே.எம்.சேனப் பாத்திமா முதலிடமும், ஸ்ரீ சாரதா நடுநிலைப் பள்ளி மாணவி ஏ.அபிநயா இரண்டாமிடமும், பழைய குற்றாலம் கில்டன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.செர்லீன் செல்சீனா மூன்றாமிடமும் பிடித்தனர்.
பரிசளிப்பு விழா: நிறைவு விழா நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ரமேஷ்ராஜா கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
இலத்தூர் ஸ்ரீராம் வித்யாலயா பள்ளி உடற்கல்வி ஆசிரியை பி.பொன்னம்மாள், செங்கோட்டை எஸ்ஆர்எம் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநர் இன்பராஜ், டென்னிஸ் பயிற்சியாளர் குமரமணிமாறன், ஜாய் மரகதம், ஜான்சன், விஜயகுமார், லில்லி, ஜேம்ஸ் மற்றும் ம.தி.தா. இந்துக் கல்லூரி உடற்கல்வி மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.