பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பிஎஸ்என்எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் திருநெல்வேலியில் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
15 சதவீத ஊதிய பலனுடன், 3 ஆவது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றை வழங்க வேண்டும். 2ஆவது ஊதிய மாற்றத்தில் குழுவின் விடுபட்ட பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். பிஎஸ்என்எல் செல்லிடப்பேசி கோபுரங்களை பராமரிக்கும் பணியை வெளியே ஒப்படைக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 2-ஆவது நாளாக இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் 800-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
பிஎஸ்என்எல் ஊழியர்கள் பணியைப் புறக்கணித்ததால், வண்ணார்பேட்டையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் வெறிச்சோடியது. போராட்டத்தின் ஒருபகுதியாக, சங்கத்தின் மாவட்டச் செயலர் சூசை மரிய அந்தோணி தலைமையில், பிஎஸ்என்எல் ஊழியர்கள் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக, பிஎஸ்என்எல் தொலைபேசி நிலையங்களில் சேவை பாதிக்கப்பட்டது.