சிறப்பு நிதியுதவி: அனைத்து வார்டுகளிலும் விண்ணப்பம் சேகரிப்பு மையம்: மாநகராட்சி ஆணையர் தகவல்
வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ள சிறப்பு
வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ள சிறப்பு நிதியுதவிக்காக அனைத்து வார்டுகளிலும் விண்ணப்பம் சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் வி.நாராயணன் நாயர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வறுமைக் கோட்டிற்கான விண்ணப்பப் படிவத்தை www.tnrd.gov.in என்ற இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். 4 பக்கங்கள் கொண்ட அந்த விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து மாநகராட்சிப் பகுதிகளில் அந்தந்த வார்டுகளில் உள்ள விண்ணப்பம் சேகரிப்பு மையத்தில் ஒப்படைத்து அதற்கு ஒப்புகைச் சீட்டு பெற்றுக்கொள்ளலாம்.
இதற்காக மாநகராட்சி ஆணையர் வி.நாராணயன் நாயர் உத்தரவின் பேரில் ஒவ்வொரு வார்டு பகுதியிலும் இரண்டு முதல் நான்கு விண்ணப்பம் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் விண்ணப்பப் படிவத்துடன் எவ்வித ஆவணங்களையும் இணைக்கத் தேவையில்லை. பொதுமக்கள் விண்ணப்பப் படிவத்தில் குடும்பத் தலைவி பெயர், வயது, முகவரி, குடும்ப அடையாள அட்டை எண், குடும்பத் தலைவி ஆதார் எண் அல்லது ஆதார் சேர்க்கைக்காக வழங்கப்பட்ட எண், குடும்பத் தலைவி நலவாரிய உறுப்பினராக இருப்பின் அதற்கான அடையாள அட்டை எண், சொந்த குத்தகையாக நிலம் ஏதும் இருப்பின் அதற்கான சர்வே எண், பரப்பளவு உள்ளிட்டவற்றின் விவரத்தைக் குறிப்பிட வேண்டும். குடும்ப உறுப்பினர் விவரங்களை கவனத்துடன் பூர்த்தி செய்ய வேண்டும்.
பான் கார்டு எண் இருப்பின் அந்த எண்ணையும் குறிப்பிட வேண்டும். குடும்பத்தில் சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்ட பயனாளி யாரேனும் இருப்பின் அந்த அடையாள அட்டை எண்ணையும் தெரிவிக்க வேண்டும். குடும்பத்தில் மாற்றுத்திறனாளி இருப்பின் அதன் விவரம், அடையாள அட்டை எண், அரசு உதவித்தொகை பெற்ற விவரம் ஆகியவற்றை விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும்.
பொது மக்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பப் படிவங்கள் கணினியில் ஏற்றப்பட்டு அதில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அரசு நிதியுதவி வழங்கப்படும்.