பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய தென்னிந்திய கல்லூரிகளுக்கு இடையிலான மகளிர் வாலிபால் போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரி, கேரளத்தின் கோட்டயம் அல்போன்ஸ் கல்லூரி அணிகள் வெற்றி பெற்றன.
புற்றுநோய் விழிப்புணர்வை வலியுறுத்தி, 6-ஆவது மயன் கோப்பைக்கான தென்னிந்திய கல்லூரிகள் மகளிர் வாலிபால் போட்டி மற்றும் தென் மாவட்ட அளவிலான ஆடவர் அமர்வு வாலிபால் போட்டி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தின் உள் விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
4 நாள்கள் நடைபெறும் இந்தப் போட்டியை திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சராட்கர், ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் ராஜகோபாலன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மகளிர் வாலிபால் போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம்., எம்.ஓ.பி. வைஷ்ணவ கல்லூரி, பனிமலர் பொறியியல் கல்லூரி, கோபி பி.கே.ஆர். கல்லூரி, கோவை பிஎஸ்ஜி கல்லூரி, திருச்சூர் செயின்ட் ஜோசப் கல்லூரி, கோட்டயம் அல்போன்ஸ் கல்லூரி, எர்ணாகுளம் தூய சவேரியார் கல்லூரி, தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரி, மதர் தெரசா கல்லூரி, குற்றாலம் பராசக்தி கல்லூரி, பேட்டை ராணி அண்ணா கல்லூரி, பாளையங்கோட்டை எஸ்.டி.சி. கல்லூரி, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி ஆகியவை பங்கேற்றுள்ளன.
முதல் ஆட்டத்தில் சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரி அணி 25-17, 25-19 என்ற நேர் செட்களில் எர்ணாகுளம் சேவியர் கல்லூரி அணியை வீழ்த்தியது. 2-ஆவது ஆட்டத்தில் கோட்டயம் அல்போன்ஸ் கல்லூரி அணி 25-21, 25-21 என்ற நேர் செட்களில் கோபி பி.கே.ஆர். கல்லூரி அணியை வீழ்த்தியது.
ஆடவர் வாலிபால்: முன்னதாக, தென் மாவட்ட ஆடவர் அமர்வு வாலிபால் போட்டியில் தூத்துக்குடி முத்து நகர் அணி 30-24 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. வரும் 16-ஆம் தேதி மாலை 6 மணிக்கு பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.